வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி
- நிலவளம்
கு. கதிரவன்.,
இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும், அக் கடவுள்களுக்கு எண்ணற்ற விழாக்கள் என குறிப்பிட்ட கடவுளின் குறியீடாக இந்து
சமய விழாக்கள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு
ஆவணி மாதம், சுக்லபட்சம், ஹஸ்த நட்சத்திரம், வளர்பிறை சதுர்த்தி
அன்று அவரின் அவதார தினமாக சதுர்த்தி திருவிழா பணக்காரர், ஏழை
என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகைக்குப்
பிறகு இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்திதான்.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே
என்ற விநாயகர் துதி கேட்காத இடமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு மக்களோடும், கலாச்சாரத்தோடும் கலந்தது விநாயகர் வழிபாடாகும்.
விநாயகர்
அவதரித்த வரலாறு :
முன்னொரு காலத்தில் கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால்
,இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம்
பெற்றிருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்று சேர்ந்து சென்று சிவபெருமானிடம்
சரண் அடைந்தனர். இதனால்
அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித
உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும், கஜமுகாசுரனுக்கும்
கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் கொம்புகளில் ஒன்றை
ஒடித்து அவனை அழிக்க ஏவினார். அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம்
செய்தார். பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு
அருளினார். இதன் மூலம்
அனைவரும் மகிழ்ந்தனர். நல்வாழ்வெய்தினர். எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது
வழக்கமாகியது. அன்றைய
தினம் விநாயகரை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.
வரலாற்றில்
விநாயகர் :
விநாயகர் சதுர்த்தி பற்றிய முதல் குறிப்பு ரிக் வேதத்தில்
உள்ளது. ஞானத்தின் அதிபதியான
இவரைப் பற்றிய விரிவான கதைகள் வேதத்திற்குப் பின்னான புராணங்களில் வந்தன. மஹாபாரதத்தில் விநாயகராகவும்,
கந்தபுராணம், நாரதபுராணம் போன்றவற்றில் கணபதி என்றும்
குறிப்புகள் உள்ளன.
உருவ வழிபாடு 8-ஆம் நூற்றாடுக்குப்
பின்னரே வந்ததாகச் சொல்கிறார்கள்.
எல்லோரா குகையில்( கி.பி.5-8 ) சக்தி தேவிக்கு அருகில் இருக்கும் விநாயகரே பழமையானவராக தெரிகிறார். இந்த கால கட்டத்தில்தான் விந்திய
மலைக்கு கீழிருக்கும் தக்கான பீடபூமி பகுதிகளான சாளுக்கிய தேசமான கர்நாடகாவிற்கு சென்றடைந்ததாக
வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
மேலும் வாதாபியில் இருந்து வந்த சமஸ்கிருத ஆன்மிகவாதிகளால்
விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், கி.பி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன்
விநாயகர் சிலை திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
இதுவே தமிழகத்தின் பழமையான விநாயகர் சிலை என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். பிள்ளையார்பட்டியில்
உள்ள குடைவரைக் கோயிலில் உள்ள விநாயகர் சிலையும் மிகப் பழமையானதாகும்.
இந்தியாவில்
விநாயகர் வழிபாடு :
இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி
விழா கொண்டாடப்பட்டாலும், மும்பையில் கொண்டாடப்படும் விழாவே பிரசித்தி
பெற்றதாகும். புனேவில்
மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜி, முகலாய-மராத்திய போருக்கு பின்னான காலத்தில்தான் முதன் முறையாக விழா மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பண்டைய ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் மக்களை ஒன்றினைக்க பாலகங்காதரத் திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவினை மக்களிடையே
கொண்டு சென்று, மக்களை ஒன்றினைக்க அவ்விழாவை ஒரு யுக்தியாக பயன்படுத்திக்
கொண்டார். இதனால் மக்களிடையே
ஏழை-பணக்காரன் வித்தியாசமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக
மாறியது. இன்று நேபாளத்தில்
முழுமையாகவும், மொரிசீயஸ், சிங்கப்பூர்,
மலேசியா, அமெரிக்கா மற்றும் லண்டனிலும் வெகு சிறப்பாக
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர்
வழிபாட்டு முறைகள் :
விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியமாகும். இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ,
வைணவ சமயத்தோடு ஒன்றிணைந்தது. கிருதயுகத்தில் மகாசுடர்,
திரேதாயுகத்தில் மயூரேசர், துவாபர யுகத்தில் கஜானனன்,
கலியுகத்தில் கணேசர், பிள்ளையார், கணபதி, ஆனை முகன், கஜமுகன்,
விக்னேஸ்வரன் என்று சுமார் 32 மூர்த்தங்களில் வழிபடப்பட்டு
வருகிறது.
மனிதனுக்கு வாயும், உதடும் வெளியே
தெரியும். மற்ற மிருகங்களுக்கும்
அப்படியே. யானையின் வாயை
தும்பிக்கை மூடிக்கொண்டிருக்கிறது.
வெளியே தெரியாது.
தேவையின்றி பேசக் கூடாது என்றும், தேவையற்ற
பேச்சு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது இதனால் விளக்கப்படுகிறது. இந்து கடவுளில் முதன்மையானவராக போற்றப்படும்
இவர் வெற்றியை வழங்கும் வல்லவராகவும், தடைகளை தகர்ப்பவராகவும்,
ஞானத்தின் தெய்வமாகவும் போற்றப்படுகிறார். விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல்,
பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம் போன்றவை நிவேதனமாக படைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று அவர் திருஉருவத்திற்கு
அருகம்புல், மல்லிகைப் பூ, எருக்கம்பூ போன்றவற்றால்
அலங்கரித்து தினமும் பூஜை செய்து 3 முதல் 10 நாட்களுக்குப் பிறகு நீர் நிலைகளில் விடப்படுகிறது.
விநாயகர் நிவேதனத்தில் கொழுக்கட்டை பிராதான இடம் வகிக்கும்
பொருளாகும். தேங்காய்
மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை விநாயகருக்கு
மிகவும் பிடித்த நைவேத்தியமாகும். மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும்
பூரணம் பிரம்மம். நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை
மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.
மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளி வரும் என்பதை உணர்த்தவே
கொழுக்கட்டை படைக்கப்படுவதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.
விநாயகரை வழிபடும் முறைகளில் தோப்புக் கரணமும் ஒன்றாகும். கரணம் என்றால் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம். இவைகளைத் தோற்பது தோற்புக்கரணம் எனலாம். விநாயகர் முன் இவைகளையெல்லாம் இழந்து
தூய்மை அடைய வேண்டும் என்றும், நாம் நமது தவறை உணர்ந்து வந்த
காரியங்கள் நிறைவேற வேண்டும் என வேண்டுவதே தோப்புக்கரணமாகும்.
மேலும் விநாயகர் வழிபாடானது கார்த்திகை மாதம் வளர்பிறை
பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும்
விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும் இவ்விரதத்தில் 21 இழைகளினால்
ஆன காப்புக் கயிற்றினை கணவனும்-மனைவியும் வல, இடக் கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர். முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப்
பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர்.
இலக்கியங்களில் விநாயகர் :
விநாயகர் அகவல் என்ற நூலினை ஔவையாரும், புதுச்சேரி மணக்குள விநாயகரை போற்றிப் பாடும் விநாயகர் நான்மணிமாலை என்ற நூலினை பாரதியாரும், திருக்கடவூர் கன்னவாரண பிள்ளையார் பதிகத்தை அபிராமப் பட்டரும், கணேச பஞ்சரத்தினத்தை ஆதிசங்கரரும், விநாயக பரத்துவம் என்ற நூலினை குமரகுருசாமி குருக்கள் என்பவரும் எழுதி விநாயகர் புகழ் பரப்பியுள்ளனர்.
நமது பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் இரண்டரக் கலந்துவிட்ட விநாயகர் சதுர்த்தி விழாவினை நாமும் நமது அஹங்காரங்களை விட்டொழிக்கவும், காரிய சித்தியடையவும், உயர் ஞானம் பெறவும் பக்தியோடு விநாயகருக்கு படையலிட்டு, வணங்கி மெய் ஞானம் ஓங்கி வாழ்வோம்.