Friday, 27 October 2017

கீழடியில் தமிழர் தொன்மம்

கீழடியில் தமிழர் தொன்மம்

                                                                                                        – நிலவளம் கு.கதிரவன்


    ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் கலந்துகொண்டபோது இவ்விடயம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதாரமாக 02.02.1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையை மேற்கோளாகக் கூறினேன்.  மெக்காலே இப்படி பேசியிருந்தார். ”இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தாலன்றி அந்த நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என நான் நினைக்கவில்லை”. பிறகு பேச்சு கீழடி அகழாய்வு தொடர்பில் சென்றது.
      தமிழர்களின் தொன்மையையும், நகரிய வாழ்க்கை முறையையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் கீழடி அகழாய்வில் அரிய சான்றுகள் கிடைத்து வருவது தமிழராகிய நாமெல்லாம் கர்வமும், பெருமையும் அடையக் கூடிய ஒன்றாகும்.  இத்தகைய பெருமையில் நாம் தொடர்ந்து திளைப்போமா என்பது ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதில்தான் உள்ளது.
       சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டு மத்தியத் தொல்லியல் துறை உதவியுடன் அகழாய்வு தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலிலேயே, கி.மு.3-ம் நுற்றாண்டு தொடங்கி கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.  இதுவரை 5300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.  அதில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள், பாசன வாய்க்கால்கள், ஆப்கானிஸ்தான் கலைப் பொருட்கள், வட மாநில முத்து மணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.இவையெல்லாம் அன்றே பெரு வணிகம் நடந்ததற்கான சாட்சியாகும்.
       இதன் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் மட்டுமே நகர நாகரிகம் என்பது புறந்தள்ளப்பட்டு, சங்க காலத்திலேயே தமிழன் நகர நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான் என்பது புலனாகிறது.
       முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள்,  ”கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள்  கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.  சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது.  புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று ஏற்கெனவே கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
                   தவிரவும் தமிழர் தொல்லியல் வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ளதும் கீழடியில்தான். செங்கற்களைக் கொண்டு நுட்பமான முறையில் திறந்தநிலைக் கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் என வெவ்வேறு கோணங்களில் இருந்து ஓரிடத்தில் வந்து சேரும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது, சங்ககாலத்தில் தமிழர்களின் அறிவியல் மேன்மையை புலப்படுத்துகிறது.
          இவை மட்டுமின்றி, கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களில் வேந்தன், திசயன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், ”வணிகப் பெருமூவர்” என்று குறிப்பிட்ட ( சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரே வணிகப் பெருமூவர்) ஆதாரங்களும் கிடைத்ததின் வழியாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயர்களோடு இவை பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
           மேலும் தமிழறிஞர் ம.ராசமாணிக்கனார் தனது நீண்ட சங்க இலக்கிய ஆராய்ச்சியில், சங்ககால மதுரை தற்போதைய மதுரை இல்லை என்றும், அது திருபுவனத்திற்கு மேற்காகவும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காகவும் அமைந்திருக்கக் கூடும் எனக் கூறினார்.  தற்போதைய கீழடி அகழாய்வும் அதை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.
            110 ஏக்கர் கொண்ட கீழடியின் மொத்த அகழாய்வு இடத்தில் 50 சென்ட் இடத்தில் மட்டுமே தற்பொழுது இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறுமா? என்ற ஐயம் கல்வியாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.  இது தவிர, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும் மைசூர் அருங்காட்சியகத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சென்றால் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குக் கிடைத்த கதிதான் கீழடிக்கும் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
 ஏற்பட்டுள்ள ஐயங்களையும், அச்சங்களையும் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைக் கண்டெடுத்து, உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது தமிழக அரசிற்குக் கூடுதலாக உள்ளது.  எனவே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரிக்க ஏதுவாக மாநில அரசு உறுதியளித்தது போல் உடனடியாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்.  தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக அறிக்கை வெளியிட ஆவனசெய்து தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதி செய்ய வேண்டும்.  இதுவே அனைத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.
 

Saturday, 26 August 2017

எது அந்தரங்கம்?



             எது அந்தரங்கம்?

 


     முத்தலாக் தொடர்பான உச்சநீதி மன்றத்தின் பரபரப்பு தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 


     இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டனி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி அவர்கள் தொடுத்திருந்த வழக்குதான் தனி மனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு உண்டா என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

     நமது இந்திய அரசியல் சட்டமானது நமக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, மற்றும் அரசியலமைப்பிற்கு தீர்வு காணும் உரிமை போன்ற உரிமைகள் சட்டப் பிரிவு 14 முதல் 32 வரையிலான பகுதியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்ற தனியுரிமை சார்ந்த சட்ட விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை. எனினும் அடிப்படை உரிமை சார்ந்த விளக்கங்களை நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 மற்றும் 21 வரையறுத்து கூறியுள்ளது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 3-வது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துவதை தடை செய்துள்ளது. தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் 1954ல் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962ல் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை அல்ல என தீர்ப்புரை வழங்கியது.  தற்பொழுது இதில் சிக்கல் ஏற்படவே மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியே விவாதித்து அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  அரசாங்கம் உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இதுதான் உரிமையின் இயல்பு. ஆரம்ப காலத்தில் நமது உரிமைகளை கட்டுப்பாடற்ற முழுமையோடு அனுபவித்து வந்த நாம், நாகரிக சமூக வளர்ச்சியின் காரணமாகவும், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாகவும்  இதற்கொரு தீர்வாக அரசாங்கம் சட்ட வரையறை செய்தது.  இது தொடர்பில் மேற்படி பட்டியலிடப்பட்ட உரிமைகளை அனுபவிக்க நமக்கு வழி வகை செய்தது.  அரசியலமைப்பு ஏற்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையில் உரிமை சம்பந்தமாக தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐயங்கள் ஏற்படவில்லை.  கால மாற்றத்தில், நாகரீக சமுதாயமாக மேம்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பாதுகாப்பு கருதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

     அந்தரங்கம் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.  அது உடல் சார்ந்ததாக இருக்கலாம்.  அல்லது தனியரின் தகவல் சார்ந்ததாக இருக்கலாம்.  உடல் சார்ந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  ஆனால் தனியரின் தகவல் சார்ந்தது என்பது மக்கள் தொகை பெருக்கம், தேச பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தரவுகள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

     இப் பிரச்சினையின் மையப் புள்ளியான ஆதார் தொடர்பான விபரங்கள் அனைத்து பயன்பாடுகளுக்கும் அவசியம் என மத்திய அரசு கேட்பதுதான். இதில் எந்த தவறும் இல்லை.  ஆனால் அரசிடம் அளிக்கின்ற தகவல்கள் பொது வெளியில் பரவாமல் காப்பது அரசின் கடமை என கேட்பதில் நியாயம் உள்ளது.  இன்றைய எண்ம உலகத்தில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நமது பொது தகவல்களை தினமும் அளித்துக் கொண்டு வருகிறோம்.  இதன் வழியே உருவாகும் சாதக பாதகங்களை நாம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.  இது தொடர்பில் அரசிடம் முறையிடுவதுமில்லை.

    சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றும் திறன் பேசி வழியாக நாம் செயல்படுவதை தினமும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறோம்.   அது அரசு வழியாகவோ அல்லது மேற்கண்ட வசதிகளை நமக்கு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ.  இதில் எல்லாம் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்பு கருதி கேட்கும்போது அடிப்படை உரிமை நம் கண் முன் வந்துவிடுகிறது.

     அந்தரங்கம் அடிப்படை உரிமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  முதலில் இதில் தெளிவு வேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் வழியாக ஆதார் தொடர்பான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  என்றாலும் மக்கள் வழங்கும் தகவல்களை பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதுதான் நமது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.  தேச பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுகளுக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தமது தரவுகளை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

     அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கும் நாம் ஓட்டுரிமை, சொத்துரிமை போன்றவற்றில் கண்டும் காணாமல் வாளாவிருக்கிறோம்.  தனி நபர் உரிமை சம்பந்தமான இவ்வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுரிமை என்பது சட்ட உரிமையாகத்தான் உள்ளது என்றும் இவ்விரண்டு உரிமைகளையும் அடிப்படை உரியாக்கப்பட வேண்டும் என்று கூறியதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.  சொத்துரிமை சம்பந்தமாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்போது, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளவும், பொது பணிக்காக, எந்த சொத்தையும் அரசு ஆர்ஜிதம் செய்யவும், நஷ்ட ஈடு என்ற பெயரில் அல்லாமல் ஒரு தொகையை அளிக்கவும் 1978ம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் உச்ச நீதி மன்றம் மேற்கண்ட விளக்கத்தை ஏற்காமல், இதனால் பாதிக்கப்படுவது சிறிய அளவிலான விவசாயிகள்தான் எனக் கூறி சொத்துரிமையையும் அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் என கூறியது.

    எனவே இதுபோன்ற தனி மனிதரின் பிற உரிமைகளையும் அடிப்படை உரிமையாகப் பெற நமக்கு விழிப்புணர்வு வர வேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்பின் வழியாக இனி வரும் வழக்கு விசாரணையின் கீழ் அளிக்கின்ற தீர்ப்பிலும் இது எதிரொலிக்கும் என நம்பலாம்.  இதில் நமக்குள்ள முக்கிய கடமை எதுவென்றால் நாம் அளிக்கின்ற பொது தகவல்களின் நம்பகத் தன்மைய காப்பது, பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்பதாகத்தான் இருக்க வேண்டும்.

    
    

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

  வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி -     நிலவளம் கு . கதிரவன் .,        இந்து மதத்தில் பல்வேறு கடவுளர்களும் , அக் கடவுள்களுக்கு எண்ணற்ற...